திரிணாமுல் காங்கிரஸ் ஒரு ப்ரைவேட் கம்பெனி.. ஒரு மாசத்துல யாரும் அங்க இருக்க மாட்டாங்க.. பாஜக அட்டாக்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸை ஒரு ப்ரைவேட் கம்பெனி என்று விமர்சித்துள்ள பாஜக தலைவர் சுவேந்து ஆதிகாரி, இன்னும் ஒரு மாத்தில் அக்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
வரும் மே மாதம் தமிழ்நாடும், புதுவை மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் பாஜக பக்கம் தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் சிக்கலில் உள்ளது.
ஒருவரும் இருக்க மாட்டார்கள்
இந்நிலையில், மேற்கு வங்கத்திலுள்ள ஹவுராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பாஜகவின் சுவேந்து ஆதிகாரி, "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இப்போது ஒரு அரசியல் கட்சி போல செயல்படுவதில்லை. ஒரு தனியார் நிறுவனம் போலவே அவர்கள் செயல்படுகிறார்கள். இன்னும் ஒரு மாத்தில், அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிடுவார்கள். ஒருவர்கூட இருக்க மாட்டார்கள்" என்றார்.
சுவேந்து ஆதிகாரி
திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர்தான் இந்த சுவேந்து ஆதிகாரி. கடந்த சில வாரங்களுக்கு முன், உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சுவேந்து ஆதிகாரி உட்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுமார் 40 தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரே பாஜக பக்கம் போனதால் மம்தா பானர்ஜி சற்று ஆடிப்போனார். அதன் பின், தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனமாகவே எடுத்து வருகிறார்.
பாஜக பக்கம் சரியும் திரிணாமுல் காங். தலைவர்கள்
இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைவது தொடர்ந்து கெண்டேதான் இருக்கிறது. நேற்றும்கூட, ராஜீப் பானர்ஜி உட்பட ஐந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய ராஜீப் பானர்ஜி, மேற்கு வங்கத்தின் நலனிற்காக மத்தியிலும் மற்றும் மாநிலத்திலும் பாஜகவே ஆட்சியில் இருக்க வேண்டும் என்றார்.
நேரடி சவால்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாஜகவில் சேர்வதால் மம்தா அதிர்ச்சியில் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம், பவானிபூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து ஆதிகாரி கடந்த 2016 தேர்தலில் வெற்றிபெற்ற தொகுதிதான் நந்திகிராம். பாஜக தனது முதல்வர் வேட்பாளராக சுவேந்து ஆதிகாரி முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.