கடன் மோசடி வழக்கு...மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிப்பு
மும்பை: கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைது வாரண்டை மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரைகடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்து நாட்டுக்குத் தப்பி சென்றார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விஜய் மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கதுறையும் விஜய் மல்லையாவின் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அமலாக்கப்பிரிவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மும்பையில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை பிறப்பிக்கக் கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
விசாரணையின் போது விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கூடாது என்று கிங் பிஷர் நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் கிங் பிஷர் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.












Click it and Unblock the Notifications