குஜராத்தில் பாஜகவை நெருக்கும் ஹர்திக் படேல்... கைது வாரண்ட் பின்னணி என்ன?
குஜராத்தில் பாஜகவிற்கு சவால் விடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஹர்திக் படேல் மீது ஜாமினில் வெளிவரமுடியாத வகையிலான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் படேல் சமூக மக்களின் இடஒதுக்கீட்டிற்காக போராடி வரும் ஹர்திக் படேல், பாஜகவிற்கு பெரும் சவாலாக உள்ளார். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹர்திக் படேல் மீது ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கணிசமான அளவில் இருக்கும் படேல் இன மக்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். படிதார் அனாமத் அண்டோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் இந்த போராட்டங்களை முன் எடுத்து நடத்தி வருகிறார்.
தேர்தலில் பிரதிபலிக்கக் கூடாது
குஜராத் மக்களின் வாக்குகளை ஹர்திக் படேலின் பிரச்சாரம் பிரிக்கும் என்று பாஜக எண்ணுகிறது. இதனால் தேர்தலுக்கு முன்னர் ஹர்திக் படேலை அமைப்பை தங்களுடன் இணக்கமாக வைத்துக் கொள்ள பார்த்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக தோல்வியை தழுவிவிடக் கூடாது என்பதில் அந்தக் கட்சி தீவிரமாக உள்ளது. எனவே சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே குஜராத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது.
கடுமையான போட்டி
இந்நிலையில் ஹர்திக் படேலின் ஆதவைப் பெறுவதில் இரண்டு கட்சிகளும் முனைப்பாக இருக்கின்றன. ஆனால் ஹர்திக் படேல் தொடர்ந்து பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளார். குஜராத் மாநிலம் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஹர்திக் படேல் அகமதாபாத்தில் உள்ள ஓட்டலில் சந்தித்ததாக செய்திகள் வெளியாகின.
சிசிடிவி காட்சிகள் வெளியீடு
அதற்கான சிசிடிவி காட்சிகளையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் மீடியாக்களின் கூற்றை மறுத்த ஹர்திக் படேல் தான் ராகுல் காந்தியை சந்திக்கவில்லை, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட்டை மட்டுமே சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் பாஜக என்னும் மிகப்பெரிய திருடனை தேர்தலில் ஆதரிப்பதை விட காங்கிரஸ் என்னும் சிறிய திருடனை ஆதரிக்கலாம் என்றும் ஹர்திக் கூறி இருந்தார்.
பாஜக பேரம் பேசியதா?
மேலும் கடந்த கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பாஜக, ஹர்திக் படேல் அமைப்பினரிடம் ரூ. 1 கோடி வரை பேரம் பேசி தங்களை பாஜகவிற்கு ஆதரவளிக்க கேட்டுக் கொண்டதாக நரேந்திர படேல் என்பவர் கூறி இருந்தார். இதற்காக முன்பணமாக ரூ. 10 லட்சத்தை பாஜக தந்திருந்ததாகவம் கூறி அவர் பரபரப்பை கிளப்பி இருந்தார்.
தேர்தல் தேதி வந்த 3 மணி நேரத்தில்
எந்த பக்கமும் பாஜகவிற்கு சாய்ந்து கொடுக்காமல் ஹர்திக் படேல் விடாக் கொண்டனாக இருக்கிறார். இந்நிலையில் இன்று குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த சிறிது நேரத்தில் ஹர்திக் படேலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரமுடியாத கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது விசாநகர் உள்ளூர் நீதிமன்றம்.
பழைய வழக்கில்
கடந்த 2016ம் ஆண்டு பாஜக எம்எல்ஏ ரிஷகேஷ் என்பவரின் காரை போராட்டத்தின் போது கல் வீசித் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2015லும் பாஜக எம்எல்ஏ அலுவலகம் கல்வீசித் தாக்கப்பட்டதையம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹர்திக் படேலுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.