டோணிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட் .. விஷ்ணு அவதாரமாக சித்தரித்த வழக்கில்!
அனந்தப்பூர், ஆந்திரா: இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு, ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் கோர்ட் ஜாமீனில் வெளி வர முடியாத வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளது. விஷ்ணு அவதாரம் போல டோணியைச் சித்தரித்து வந்த அட்டைப் படம் தொடர்பான வழக்கில் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 25ம் தேதிக்குள் டோணி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தற்போது டோணி ஆஸ்திரேலியா போயுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 5 ஒரு நாள் போட்டிகள், 3 டுவென்டி 20 போட்டிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்காக ஆஸ்திரேலியா போயுள்ளார். ஜனவரி 31ம் தேதி இந்தத் தொடர் முடிகிறது. ஊருக்கு திரும்பியதும் அவர் பிப்ரவரி கடைசியில் கோர்ட்டுக்கு வந்தாக வேண்டும்.
கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிசினஸ் டுடே இதழின் அட்டைப் படத்தில் டோணியை விஷ்ணு போல சித்தரித்துப் படம் போட்டிருந்தனர். "காட் ஆப் பிக் டீல்ஸ்" என்றும் தலைப்பிட்டிருந்தனர். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், டோணி போன்ற பிரபலங்கள், இதுபோன்ற புகைப்படங்களால் மத உணர்வுகள் புண்படும் என்பதை அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இதன் பின்விளைவை அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்று கண்டித்திருந்தது.
இதுகுறித்து டோணி தரப்பில் வாதிடுகையில், நான் கடவுள் போல போஸ் தரவில்லை. இந்த கட்டுரைக்காகவும், படத்திற்காகவும் எனக்கு பணம் எதுவும் தரப்படவில்லை. எனது அனுமதியும் பெறப்படவில்லை. மேலும் நான் கடவுள் போல போஸ் தரவில்லை. அனுமதியும் தரவில்லை என்று வாதிடப்பட்டது.
அதேசமயம், இந்த வழக்கில் டோணி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு அனந்தப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் இன்று டோணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.