ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை: டி.சி.எஸ் பரபரப்பு விளக்கம்
மும்பை: ஒட்டுமொத்த ஆள்குறைப்பில் ஈடுபடும் திட்டம் டி.சி.எஸ் நிறுவனத்திற்கு இல்லை என்று டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ள டி.சி.எஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து, பல ஊழியர்கள் திடீரென பணியை விட்டு நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் புகார் தெரிவித்த செய்திகளும் வெளியாகியிருந்தன.
We would like to place on record that TCS has not initiated, & is not planning to initiate, any large scale exits in any part of TCS.
— TCS (@TCS_News) January 13, 2015
மொத்தம் 25 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, குறைந்த சம்பளத்தில் பிரஷர்களை பணிக்கு சேர்க்க டி.சி.எஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் டி.சி.எஸ் நிறுவனம், தனது டிவிட்டர் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அறிக்கையாகவும் அத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதுதான்: பெரிய அளவில் ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தை டி.சி.எஸ் செயல்படுத்தவும் இல்லை, இனி செயல்படுத்தும் திட்டமும் அதற்கு இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.
TCS is the leader in the Indian IT industry and has always built its organization on strong employee values.
— TCS (@TCS_News) January 13, 2015
எங்களது நிறுவனத்தினரின் திறமைகளை அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தனியார் நிறுவனமாகவும் உருவெடுத்துவருகிறோம்.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் எங்கள் நிறுவனத்தில் இருந்து 2574 பேர் திறமையின்மை காரணமாக கட்டாய பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது எங்கள் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 0.8 சதவீதமாகும். இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் இது 1 சதவீதமாக இருக்கும் (மார்ச் மாதத்திற்குள்) என்று எதிர்பார்க்கிறோம்.
2014ம் நிதியாண்டில், 2203 பேரும், 2013ம் நிதியாண்டில், 2132 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனம் டி.சி.எஸ் ஆகும். வலுவான ஊழியர்களை கொண்டே இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி காரணமாக, ஊழியர்களுக்கும் நல்ல வாய்ப்பு அமைந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை டி.சி.எஸ். அலுவலகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் தொடர்ந்த வழக்கை ஏற்றுக் கொண்ட சென்னை ஹைகோர்ட், பணி நீக்கத்திற்கு 4 வார இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவு வந்த சில மணி நேரங்களில் இவ்வறிக்கையை டி.சி.எஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.