கர்நாடகா: ஒருவாரம் ஆகியும் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை..காங்கிரஸ்-மஜதவில் தொடரும் குழப்பம்
கர்நாடக முதல்வராக குமாரசாமி பெறுப்பேற்று 6 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
பெங்களூர்: கர்நாடக முதல்வராக குமாரசாமி பெறுப்பேற்று 6 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் முதல்வராக பொறுப்பேற்று ஒருவாரம் ஆகியும் கூட இன்னும் அமைச்சரவை விவரங்கள் வெளியாகவில்லை. எந்த துறையை யார் கவனிப்பது என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அமைச்சரவையை உருவாக்குவதில் இன்னும் குழப்பம் இருந்து வருகிறது. முக்கியமான பிரிவுகளை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் உருவாகி உள்ளது.
இதுவரை நடந்த பேச்சு வார்த்தையின் படி காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் காங்கிரஸ் நிதி, வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகிய முக்கியமான துறைகளை கேட்டுள்ளது. மஜத கட்சியில் உள்ள சில முக்கியமான நபர்களும் இதே துறைகளை கேட்டுள்ளதால், யாருக்கு இந்த துறைகளை கொடுப்பது என்ற குழப்பம் நிலவி வருகிறது.
இதில் வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகிய துறைகளை காங்கிரஸ் எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நிதி துறையை குமாரசாமியே வைத்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை டெல்லியிலும், பெங்களூரிலும் இரண்டு கட்சியும் 5க்கும் அதிகமான முறை சந்திப்பு நடத்திவிட்டது. ஆனாலும் இன்னும் அமைச்சரவை குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. இந்த வாரம் வெள்ளி, சனி முழு அமைச்சரவை விவரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கடைசி நேரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நபரான, டிகே சிவக்குமார் முக்கிய அமைச்சரவை பதவியை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது என்ன மாதிரியான துறை என்று கூறப்படவில்லை.