காண்டாமிருகத்தை தத்தெடுத்து வளர்த்துப் பார்க்க ஆசையா?.. திரிபுராவுக்குப் போங்க....
திரிபுரா வனவிலங்கு ச்ரணாலயத்தில் எவரும் விலங்குகளை தத்தெடுத்து கொள்ளலாம்.விலங்குகள் பாதுகாப்பின் ஒரு அங்கமாக மக்களும் செயல்படவேண்டும் எனவும் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாக்கவும் இவ்வேற்பாடானது அகர்தலாவிற்கு 25 மைல் தொலைவில் உள்ள ஜெபிஜலா விலங்குகள் நல சரணாலயத்தால் செய்யப்பட்டுள்ளது.
"விருப்பமுள்ளவர்கள் மற்றும் அமைப்புகள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப விலங்குகளை தத்தெடுத்துக் கொள்ளலாம். இதற்கான பங்களிப்பாக அவர்கள் அவ்விலங்கின் பராமரிப்பிற்காக வருடத்திற்கு 5ஆயிரம் முதல் 2லட்சம் வரை அளிக்கலாம்",என்று தெரிவித்துள்ளார் திரிபுரா சரணாலய தலைமை காப்பாளர் அதுல் குமார் குப்தா.
இது நாட்டின் பல இடங்களில் நடைமுறையில் இருந்தாலும் திரிபுராவில் இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் தத்தெடுத்தல் உரிமம்,இலவச பாஸ்,வரிவிலக்கு ஆகியவற்றைப் பெறலாம் என சரணாலயத்தின் உயர்நிலை காப்பாளர் குப்தா தெரிவித்துள்ளார்.மேலும் நமக்கு விருப்பமான பெயரை அந்த விலங்கிற்கு சூட்டிக்கொள்ளலாம்.
தத்தெடுப்பதற்கான விலங்குகள் பட்டியலில் வங்காள புலி, சிங்கம், சிறுத்தை, காண்டாமிருகம், இமாலய கருப்பு கரடி,ஹார்ன்பில், மயில், முதலை, ஹுலாக் கிப்பன், ஸுலோ லோரிஸ், பன்றி வால் குரங்குகள், பெலிகன், சிறுத்தை பூனை, மற்றும் கழுகு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தத்தெடுப்போரிடம் வசூலிக்கப்படும் பணம் அவ்விலங்குகளின் வாழ்வாதாரத்திற்கும்,உணவிற்கும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக சரணாலயத்தை சேர்ந்த பல மேலதிகாரிகள் தத்தெடுப்பை துவங்கி வைத்துள்ளனர்.இத்திட்டத்தின் மூலம் மக்களிடையே வன விலங்குகள் பாதுகாப்பு மீதான நோக்கத்தை அதிகரிக்க இயலும் என கூறப்படுகிறது.