வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்.. பாஜக கோரிக்கை
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தர வேண்டும் என்று பாஜக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
சச்சினுக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலருக்கும் அந்த விருதை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த வகையில் பாஜக, வாஜ்பாய்க்கு விருது அளிக்க வேண்டும் என்று தனது முந்தைய கோரிக்கையை புதுப்பித்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஏன் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது தருவதில் மத்திய அரசு இன்னும் தயக்கம் காட்டுகிறது. சச்சினை நான் மதிக்கிறேன். அதேசமயம், ஏன் வாஜ்பாய்க்கு இந்த அரசு பாரதரத்னா விருது தராமல் இருந்து வருகிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஹீரோ. ஆனால் அவருக்கு 41 ஆண்டுகள் கழித்துத்தான் பாரதரத்னா விருதை இந்த நாடு கொடுத்தது. மெளலானா அபுல் கலாம் ஆசாத்துக்கும் தாமதமாகத்தான் கொடுத்தார்கள் என்றார் பிரசாத்.
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், வரும் குடியரசு தினத்தன்று வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதினை வழங்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாஜ்பாய் போன்றோரை கெளரவிக்க நாடு தவறி விடக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications