இது அறிவியல்பூர்வமானது.. கதிர்வீச்சையே பசுமாட்டு சாணம் தடுக்கும்..குஜராத் நீதிமன்ற நீதிபதி கருத்து
காந்திநகர்: பசுஞ்சாணத்தால் கட்டப்பட்ட வீடுகளை அணுக்கதிர் வீச்சு கூட பாதிக்காது என்று குஜராத் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அவர், பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்றும், பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் வித்திட்ட நிலையில், அவரது தீர்ப்பின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

பசு கடத்தல்.. ஆயுள் தண்டனை
கடந்த 2020-ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தி வந்ததாக கூறி முகமது அமீன் என்பவரை குஜராத் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, டாப்பி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், குற்றம்சாட்டப்பட் முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தனது உத்தரவில் நீதிபதிகள் பல கருத்துகளை தெரிவித்திருந்தார்.

முழு தீர்ப்பு விவரம்
அதாவது, பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு பூமியில் சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும் என்றும், பசு நமது தாயை போன்றது எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும் எனக் கூறிய நீதிபதி, மொத்தத்தில், இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். எனினும், அவரது தீர்ப்பின் முழு விவரங்கள் அப்போது கிடைக்கவில்லை.

"நோய்களை தீர்க்கும் பசு சிறுநீர்"
இந்நிலையில், அந்த நீதிபதியின் முழு தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அவர் கூறியிருப்பதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும், நம் நாட்டில் இன்னும் பசுவதை நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம். பசு மதத்தின் அடையாளம். பசுஞ்சாணத்தில் விளையும் உணவுப்பொருட்கள், மனிதர்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பசுவின் சிறுநீர் பல நோய்களை தீர்க்கிறது.

பசுஞ்சாணமும், அணுக்கதிர் வீச்சும்
அதுமட்டுமல்லாமல், பசுக்கள் அறிவியல் ரீதியாகவும் பல்வேறு பலன்களை தரக்கூடியவை. பசுஞ்சாணம் பயன்படுத்தப்பட்ட வீடுகளை அணுக்கதிர் வீச்சு கூட பாதிக்காது என்பது விஞ்ஞான ரீதியாகவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிலரோ அந்த பசுக்களை கொன்று அசைவ உணவு சாப்பிடுவோருக்கு விருந்து படைக்கின்றனர். இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி சந்திர வியாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications