கேரள அமைச்சரின் காரை மறித்து புகார் அளித்த கன்னியாஸ்திரி.. வைரலான வீடியோ
கன்னியாஸ்திரி ரின்ஸி என்பவர் கேரள வனத்துறை அமைச்சரின் காரை மறித்து புகார் அளித்த நிகழ்ச்சியின் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி தண்ணீர் தேங்கிய சாலையில் அம்மாநில வனத்துறை அமைச்சரின் காரை மறித்து புகார் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோலையாறு வனப்பகுதியின் ஓரத்தில் கத்தோலிக்க கிருஸ்தவ நிறுவனத்தின் கான்வெண்ட் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில்தான் ரின்ஸி கன்னியாஸ்திரியாக உள்ளார்.
கேரள வனத்துறை அமைச்சர் கே ராஜூ நேற்று அந்த பள்ளியின் வழியாக ஒரு நிகழ்ச்சிக்காக காரில் சென்றுள்ளார். மழை நீர் தேங்கிய ஒரு சாலையில் திடீரென ஒரு கன்னியாஸ்திரி அமைச்சரின் காரை மறித்துள்ளார்.
திடீரென கன்னியாஸ்திரி ஒருவர் காரை மறித்ததும் கார் நிறுத்தப்பட்டது. காரை மறித்தவர் கன்னியாஸ்திரி ரின்ஸி என்பவர். அவர் சோலையாறு வனப்பகுதி எல்லை ஓரத்தில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் வேலை செய்கிறார். அவர்களுடைய கான்வெண்ட் அடிக்கடி யானையின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளது.
அடிக்கடி நடைபெறும் யானைகளின் தாக்குதல் அபாயத்திலிருந்து காப்பாற்ற வனத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் இதற்கு ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்று கூறி மனு அளித்துள்ளார்.
கன்னியாஸ்திரி கேரள அமைச்சரின் காரை மறித்து மனு அளித்த இந்த சம்பவம் பற்றிய வீடியோ பதிவு ஃபேஸ் புக்கில் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், அந்த வழியாக ஒரு நிகழ்ச்சிக்காக அமைச்சரின் கார் வருவதை அறிந்து காத்திருந்த கன்னியாஸ்திரி ரின்ஸி, அமைச்சரின் கார் அருகே வந்ததும் குறுக்கே மறித்து நிறுத்துகிறார். பின்னர், அமைச்சரை கீழே இறங்க வேண்டும் என்று கூறும் கன்னியாஸ்திரி அவர்களுடைய கான்வெண்ட் வளாகம் யானைகள் தாக்குதலுக்குள்ளாவதைக் கூறி அதனை பார்வையிட வேண்டும் என்று கூறுகிறார். காட்டு யானைகளின் தாக்குதல் ஆபத்தாக உள்ளது. இதற்கு நீங்கள்தான் வனத்துறை மூலம் ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என மனு அளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.