மேற்கு வங்கத்தில் 71 வயது கன்னியாஸ்திரியை சீரழித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நஸ்ருல் இஸ்லாம் என்கிற நோஜுல் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள கிறிஸ்தவ கான்வென்ட்டிற்கு கொள்ளையர்கள் வந்தனர். அவர்களை பார்த்த 71 வயது கன்னியாஸ்திரி அவர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சிஐடி அதிகாரிகள் கொள்ளை முயற்சிக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட இருவரில் ஒருவரான ரஹ்மான் உள்பட 5 பேரை கைது செய்தனர். கான்வெட்டில் கொள்ளையடிக்க வங்கதேசத்தில் திட்டம் தீட்டிவிட்டு மேற்கு வங்கம் வந்ததாக ரஹ்மான் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய மூளையான வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் என்கிற நோஜுலை சிஐடி அதிகாரிகள் சியால்தா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவர் கொல்கத்தாவுக்கு செல்லும் வழியில் சிக்கினார்.
நோஜுலை சேர்த்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆகும். பலாத்கார வழக்கில் தொடர்புடைய 8 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இருவரை போலீசார் தேடி வருகிறார்.
அந்த இருவரும் இந்தியாவில் தான் பதுங்கி இருப்பதாகவும், வங்கதேசத்திற்கு தப்பியோடவில்லை என்றும் கூறப்படுகிறது.