டெல்லி 5 ஸ்டார் ஓட்டலில் நர்ஸ் பலாத்காரம்: 2 பேர் கைது - சுதந்திர தினத்தன்று நடந்த அக்கிரமம்!
டெல்லி: பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் நர்ஸ் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட டெல்லி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு வாலிபர்களைக் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில், இதய நோயாளியைப் பார்ப்பதற்காக, கடந்த வெள்ளியன்று 27 வயது நர்ஸ் ஒருவர் சென்றுள்ளார். முன்னர் தனியார் மருத்துவமனை ஒன்றில் இந்தப் பெண் நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை இந்த நர்ஸ் தான் கவனித்து வந்துள்ளார். எனவே, அந்த அறிமுகத்தின்பேரில் நோயாளியை பார்ப்பதற்காக நர்ஸ் அந்த ஓட்டலுக்குச் சென்றுள்ளார்.
அங்கே இதய நோயாளியின் அட்டெண்டர்களாக நீரஜ் (25) மற்றும் ராஜன் (23) என்ற இரண்டு வாலிபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அந்த ஆடம்பர அறையில் வைத்து நர்சை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், பலாத்காரம் செய்யப்பட்டதை வெளியில் கூறினால் வேலையை இழக்க நேரிடும் என அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அப்பெண் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில் மீண்டும் ஞாயிறன்று இரவு நோயாளியைப் பார்ப்பதற்காக நர்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். அப்போது மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த நர்ஸ், இது தொடர்பாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் கணவர் மூலமாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபர்கள் இருவரையும் கைது செய்தனர். ஓட்டலில் பொருந்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் தங்களது ஊழியர்கள் யாருக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்துள்ள ஓட்டல் நிர்வாகம், விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் போலீசிடம் உறுதியளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில், சுதந்திர தினத்தன்று ஐந்து நட்சத்திர ஓட்டலில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.