அதிமுகவின் இணைப்புக்காக டெல்லி வரவில்லை...அதற்கான அவசியம் இப்போ இல்லை - ஓபிஎஸ் தடாலடி
அதிமுக அணிகள் இணைப்புக்கான நோக்கத்துடன் டெல்லிக்கு வரவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி : அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து தற்போது எந்த பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என்றும், அந்த நோக்கத்தில் டெல்லி வரவில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், அதிமுக அணிகளை இணைக்கும் பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரவில்லை, பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். பாஜக இரு அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததாக வரும் செய்திகளில் உண்மையில்லை.
அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போது பொதுச்செயலாளர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் கட்சியை நடத்துவார்கள்.
அதிமுகவைப் பொருத்த வரை பொதுச்செயலாளர் பதவி தற்போது வரை காலியாகத் தான் உள்ளது. எனவே இரட்டை இலை சின்னத்தை யாருக்குத் தர வேண்டும் என்பது இதன் மூலமே தெரிந்திருக்கும்.
அதிமுகவில் 3 பிரிவுகள் இருப்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. நாங்கள் தான் உண்மை அதிமுக ஒன்றரைகோடி தொண்டர்கள் எங்களுக்குத் தான் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆட்சி மட்டுமே எதிர் அணியிடம் இருக்கிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு இழுக்க பாஜக முயற்சிப்பது போல எனக்கு தெரியவில்லை. ரஜினி தனிக்கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது அவருக்குத் தான் தெரியும். இதுவரை என்னிடம் அது குறித்தெல்லாம் பேசியது கிடையாது.
டெல்லியில் தமிழ்நாடு இல்லம் அருகே பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆட்சி எங்களால் கவிழாது, அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டி ஆட்சியை நடத்த வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications