செல்போன் பேசியதால் விபரீதம்... 50 அடி ஆழத்தில் பஸ் கவிந்து 21 பேர் பலி... 30 பேர் படுகாயம்
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் செல்போன் பேசிக் கொண்டே டிரைவர் பஸ் ஓட்டியதால் பயணிகள் பஸ், 50 அடி ஆழத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் 21 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
ஓடிசா மாநிலத்தில் பயணிகள் பஸ் ஒன்று பௌத் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அங்குள் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. பழைய மணித்ரி பாலம் அருகில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் செல்போன் பேசிக் கொண்டே பஸ் ஓட்டியதாக சொல்லப்படுகிறது. அப்போது சிறுவன் ஒருவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டு எதிர்ப்புறமாக வந்துள்ளான்.
எதிர் வரும் சிறுவன் மேல் மோதிவிடக் கூடாது என்பதற்காக சட்டென பஸ்ஸை இடப்பக்கமாக டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டை இடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பஸ், 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இதனால், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.