விவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல்
புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது:
கொரோனா நோய் காரணமாக முடங்கிப்போய் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் வசதி வழங்குவது மிகுந்த முக்கியம். எனவே சிறப்பான வகையில் கடனுதவி வழங்க கூடிய வங்கிகளுக்கு ஆண்டு இறுதியில் சிறந்த வங்கி என்ற விருது மாநில அரசால் வழங்கப்படும்.
மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு இது பற்றிய அறிக்கை அனுப்பி வைக்கப்படும். நமது குடிமக்களுக்கு எப்போது மிகவும், தேவைப்படுகிறதோ அப்போது உதவ முடியாவிட்டால் நமது அனைத்து சிஸ்டம் மற்றும் அமைப்புகளும் இருந்தும் வீண்தான்.
விவசாயிகள், மிஷன் சக்தி குழுக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் நமது தொழில்களுக்கான அச்சாணி. சிறிய அளவு கடனைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். சொந்தக்காலில் அப்போதுதான் அவர்களால் நட்க முடியும். நமது பொருளாதாரத்தை அதன் சொந்தக்காலில் நிற்க வைப்பது இந்த பிரிவினர்தான். எனவே முழுமனதோடு இவர்களுக்கு உதவி செய்வது நமது கடமை.
கடந்த சில வாரங்களாக வங்கிகளில் கடன் வழங்கும் விகிதம் அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிலைமையை வங்கிகள் நீட்டித்து செல்லவேண்டும்.
சிறு மற்றும் குறு தொழில்கள் நமது மாநிலத்தின் முதுகெலும்பு. வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதுபோன்ற சிக்கலான காலகட்டத்திலும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு போதிய அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார். பல்வேறு வங்கிகளில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார்.