இனி மருந்து சீட்டில் கோழிக்கிறுக்கல்கள் இருக்காது.. டாக்டர்களின் கையெழுத்துக்கு குட்டு வைத்த நீதிபதி
புவனேஸ்வரம்: அனைத்து மருந்து சீட்டுகள், மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என ஒடிஸா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து அழகாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் மருந்துச் சீட்டுகளில் மட்டும் கிறுக்குவது போல் எழுதுவார்கள். அந்த மருத்துவரின் கையெழுத்து பழகிய மருந்தாளுநர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் சில கையெழுத்துகளை வேறு மருந்தாளுநர்கள் கண்டுபிடிக்க சில சிரமங்கள் உள்ளன. புதிய மருந்தாளுநர்கள் கையெழுத்து புரியாமல் மருந்துகளை மாற்றி கொடுத்துவிட்டால் பெரும் பிரச்சினை ஏற்படும்.
சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சொல்லும் மருந்துகளை அவர்களுடைய உதவியாளர்கள் குறித்துக் கொண்டு அதை பிரிண்ட் எடுத்து நோயாளிகளிடம் கொடுக்கிறார்கள். சிறிய கிளீனிக்குகளில் கூட இந்த முறை வந்துவிட்டது. இந்த நிலையில் ஒடிஸா ஹைகோர்ட்டில் ஒரு வினோதமான வழக்கு வந்துள்ளது.
மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் ஒருவர் கருணைத் தொகை கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாகவும் புரிந்து கொள்ளும்படியாகவும் இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி அந்த மருத்துவரை ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி டாக்டரும் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து விடுங்கள். முடிந்தால் பெரிய எழுத்துகளில் (Capital Letters) அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என ஒடிஸா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications