ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் பின்னடைவு.. பழங்குடி இனத் தலைவர் சரணடைய முடிவு!!
கோராபுட்: ஒடிஷா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்த பழங்குடி இனத் தலைவர் தற்போது ஆயுதங்களை கைவிட்டு சரணடைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிஷா மாநிலத்தில் கோராபுட் மாவட்டம் நாராயண்பட்னாதான் மாவோயிஸ்டுகளின் முக்கிய கோட்டை. இங்கு சாஷி முலியா ஆதிவாசி சங்கம் என்ற அமைப்பு நாசிகா லிங்கா தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்த உள்ளூர் ஆயுதம் தாங்கிய குழுதான் மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நாசிகா லிங்காவின் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் கோராபுட் போலீசில் சரணடைந்துள்ளனர்.
தாங்கள் மாவோயிஸ்டுகளுக்கான கூட்டங்கங்களை ஒருங்கிணைத்தவர்கள் என்று கூறி போலீசில் 12 பேரும் சரணடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 33 பேர் இதுவரை சரணடைந்திருக்கின்றனர்.
நாசிகா லிங்காவையும் சரணடைய வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பழங்குடி இனத்தவருக்கு நில உரிமை வழங்க வேண்டும்; முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற நாசிகா லிங்காவின் கோரிக்கைகளை அரசும் ஏற்க முன்வந்திருக்கிறதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் நாசிகா லிங்காவும் சரணடையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் சரணடைந்தால் ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளுக்கு அது பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.