மனைவியை ரூ 25,000க்கு ஏலம் விட்ட கணவர்... மூடி மறைக்கும் அரசு - மீண்டும் சர்ச்சையில் சிக்கியது உ.பி
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கணவரே தனது மனைவியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது அங்கு பெண்கள் அடிமைகளாக ஏலம் விடப்பட்டு, விற்கப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் சோஹன்லால் வால்மிகி. கடந்தவாரம் இவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் நடந்த சந்தையில் ஏலம் விட்டதாகக் கூறப்படுகிறது.
அப்பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். பின்னர் ஏலம் எடுத்த பிரிஜ் மோகனுடன் அப்பெண் அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், ஊடகங்கலில் வெளியான இத்தகவலை அந்த மாவட்ட ஆட்சியாளரும், போலீசாரும் மறுத்துள்ளனர். மேலும், பிரிஜ் மோகன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக விளக்கமளித்துள்ளனர்.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலெக்டர் மற்றும் போலீசாரின் கருத்துகளில் பொய் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் இருந்து பெண்களை, குறிப்பாக ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விலைக்கு விற்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications