இரு நாட்களில் மும்பை அழைத்து வரப்படுகிறார் சோட்டா ராஜன்! தீர்த்துக்கட்ட தாவூத் ஸ்கெட்ச்?
மும்பை: இன்னும் இரு நாட்களில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா சோட்டா ராஜன் மும்பை அழைத்துவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை அவைத்துவரும் பாதை மற்றும் பயண திட்டங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நெட்வொர்க் ஏற்படுத்தி ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத தொழில் செய்து வந்தவர் சோட்டாராஜன்.

கைது
கடந்த 20 ஆண்டுகளாக இவரை மும்பை போலீசார் தேடி வந்தனர். சமீப காலமாக அவர் சர்வதேச போலீஸ் மூலமாகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தோனேஷியா நாட்டின் பாலிதீவுக்கு வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது.

இரு நாட்களில்
இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். இன்னும் இரு நாட்களில் மும்பை போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்கிறார்கள். அதன் பிறகு சோட்டா ராஜன் இந்தியா அழைத்து வரப்படுவார்.

மும்பை சிறை
சோட்டா ராஜனை மும்பையிலுள்ள கற்சுவரால் ஆன சிறப்பு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். அவர் எந்த வழியாக அழைத்துவரப்படுகிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளை யோசித்து வைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதுபற்றி வாய் திறக்க அவர்கள் மறுக்கிறார்கள்.

தாவூத் திட்டம்
தாவூத் இப்ராஹிம் கும்பல், மும்பையில் பலம் வாய்ந்ததாக உள்ளது. எனவே, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் போலீஸ் காவலில் இருக்கும்போதே சோட்டா ராஜனை கொலை செய்ய திட்டமிடலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications