பெங்களூரில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்த ஓலா டாக்சி டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் 31 வயது பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஓலா டாக்சி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பிடிஎம் லேஅவுட் பகுதியை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு ஓலா டாக்சி மூலம் இந்திரா நகருக்கு கிளம்பியுள்ளார். டாக்சி இந்திரா நகரில் உள்ள சிஎம்ஹெச் ரோட்டில் செல்கையில் டிரைவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உதவி கேட்டு அலறியுள்ளார். இதையடுத்து டிரைவர் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உடனே அந்த பெண் இது குறித்து போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து காரை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டியவரின் பெயர் பசவராஜு என்பது தெரிய வந்துள்ளது. காரில் இருந்து ஓட்டுனர் உரிமம் மூலம் டிரைவரின் விபரங்கள் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பசவராஜு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பசவராஜுவை போலீசார் தேடி வருகிறார்கள்.