ரியோ ஒலிம்பிக் அணிவகுப்பில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் அபினவ் பிந்த்ரா
டெல்லி: ரியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி மூவர்ண தேசியக் கொடியை ஏந்திச் செல்வதற்காக துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலின் ரியோவில் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த போட்டிக்கான அணிவகுப்பில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா இந்திய தேசிய கொடியை ஏந்தி பங்கேற்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
5-வது ஒலிம்பிக் தொடர்
2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக தனது 17 வயதில் அபினவ் பிந்த்ரா அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வரும் இவருக்கு ரியோ 5-வது ஒலிம்பிக் தொடர் ஆகும்.
தனிநபர் சாதனை
2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 10 மீ்ட்டர் ஏர் ரைபில் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் தனி ஒரு இந்திய நபர் வாங்கிய முதல் ஒலிம்பிக் பதக்கம் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபினவ் நெகிழ்ச்சி
இதுகுறித்து அபினவ் பிந்த்ரா கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் கொடியேந்தி அணிவகுப்புக்கு தலைமை வகிப்பதென்பது மிகப்பெரிய கெüரவம். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் நன்றியுடன் உணர்கிறேன் என்றார். அபினவ் பிந்த்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவர் ரனின்தர் சிங் கூறுகையில், அபினவ் பிந்த்ராவுக்கு இந்த கெüரவம் அளிக்கப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறோம்' என்றார்.
சுஷில்குமார்
கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கின்போது இந்திய அணிக்கு தலைமை தாங்குவதற்காக குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோரின் பெயர்களோடு, அபினவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அப்போது அந்த வாய்ப்பு மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்டது.