லைசென்ஸ் இல்லையா, விமானத்தை ஓரம் கட்டு.. டெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் சிக்கிய பைலட்
Recommended Video
டெல்லி: வீட்டில் லைசென்ஸ்சை மறந்து வைத்துவிட்டு வந்தால் டூவீலர், கார் ஓட்டுநர்களுக்கு டிராபிக் போலீசார் அபராதம் விதிப்பதை பார்த்துள்ளோம். ஆனால், லைசென்ஸ் இல்லாமல் விமானம் ஓட்ட முயன்ற பைலட் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
இந்திய விமான துறை வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் இப்போதுதான் நடந்துள்ளது.
டெல்லியிலிருந்து மஸ்கட் புறப்பட வேண்டிய ஓமன் ஏர் விமானத்தின் பைலட்தான், இப்படி வகையாக சிக்கிக்கொண்டவர். இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ஓமன் விமானத்தின் கோ-பைலட் ஒருவர் லைசென்ஸ் வைத்திருக்கவில்லை என்பது அம்பலமானது.
அதிகாரிகளிடம் சிக்கினார்
எப்போதுமே விமானிகள் கமர்சியல் பைலட் லைசென்ஸ் எனப்படும் அந்த லைசென்சை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் இவ்வாறு அந்த பைலட் வைத்திருக்கவில்லை என்பதால் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகளை ஆரம்பித்தனர்.
விமானம் நிறுத்தப்பட்டது
அதிகாரிகளின் திடீர் சோதனையால், பயணிகள் ஏறிய நிலையில் கிளம்ப தயாராக இருந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஓமன் ஏர்லைன்ஸ், இந்திய விமானத்துறை அதிகாரிகளுக்கு, சம்மந்தப்பட்ட பைலட்டின் லைசென்சை ஃபேக்ஸ் செய்தது. அதை சரிபார்த்த பிறகே 2 மணி நேரம் கழித்து விமானத்தை கிளம்ப அனுமதித்தனர் அதிகாரிகள். இதுகுறித்து ஓமன் ஏர்வேஸ் மீடியாக்களுக்கு இதுவரை பதில் எதுவும் தரவில்லை.
விதிமுறைகளில் கெடுபிடி
முன்பெல்லாம் இந்திய விமானத்துறையினர் இவ்வளவு கடுமையாக விதிமுறைகளை கண்காணிப்பதில்லை. அதேநேரம், இந்திய விமானங்கள் வெளிநாடுகளில் தரையிறங்கும்போதும், கிளம்பும்போதும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
முன்பு ஜாலிதான்
இதுகுறித்து விமானத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முந்தைய மத்திய அரசு காலகட்டத்தில் பல முறை, உரிய ஆவணங்கள் இல்லாமலேயே பிற நாட்டு விமானங்களை கிளம்ப அனுமதித்துள்ளோம். அந்த நாடுகளுடனான நட்பு கெட்டுவிட கூடாது என்பதற்காக இவ்வாறு விதிமுறைகளை தளர்த்திக்கொள்ள எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இப்போதெல்லாம் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன" என்றார்.