370வது பிரிவை அவ்வளவு எளிதாக மோடி அரசால் நீக்கிவிட முடியாது.. ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசால் எளிதில் நீக்கிவிட முடியாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாகா ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு ஒப்புதல் அளித்தது "ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசன சட்டசபை". இந்த அரசியல் சாசன சட்டசபையும் தற்போதைய மாநில சட்டசபையும் ஒன்றல்ல.
இந்த அரசியல் சாசன சட்டசபை அமைக்கப்பட்டு அதனடிப்படையில் ஜம்மு காஷ்மீரின் இந்தியாவின் ஒரு பகுதியாகி அதன் பின்னர்தான் 370வது அரசியல் சாசன பிரிவு உருவாக்கப்பட்டது.
இப்போது இதை நீங்கள் பிரச்சனைக்குரிய விஷயமாக்கும் போது மீண்டும் அரசியல் சாசன சட்டசபையைக் கூட்டியாக வேண்டும்.
மத்திய - மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்த வேண்டுமெனில் 370வது பிரிவை நீக்குவது போன்ற நடவடிக்கைதான் வழி அல்ல. அப்படி நீக்கினால் ஜம்மு காஷ்மீரத்து மக்களுக்கும் இந்தியாவின் இதர பகுதி மக்களுக்கான இடைவெளிதான் அதிகரிக்கும் என்பதை விரைவிலேயே புரிந்து கொள்வீர்கள்.
பாரதிய ஜனதாவின் அரசியல் நெருக்கடிகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஜம்மு காஷ்மீரத்தின் மீது முதல் தாக்குதலை தொடுக்காதீர்கள்.
அரசியல் சாசனப் பிரிவு 370 தான் ஜம்மு காஷ்மீரில் சொத்துகளை வாங்க தடை விதிக்கிறது என்பது அபத்தமானது. அதற்கு முன்னரே பஞ்சாப் பெரும் பணக்காரர்களால் காஷ்மீர மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க மகாராஜாவாலேயே சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுதான் 370வது பிரிவிலும் சேர்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications