ரயிலில் சீட் பிடிப்பதில் மோதல்... ஒருவர் கொலை... மீரட்டில் பயங்கரம்
மீரட்: ரயிலில் சீட் பிடிப்பது தொடர்பாக உருவான மோதலில் பயணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனில் இருந்து கொச்சிக்கு நேற்று மாலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையம் அருகே வந்தபோது, சீட் பிடிப்பது தொடர்பாக ஹரித்வாரைச் சேர்ந்த ஜஸ்வீந்தர் என்ற பயணிக்கும் வேறு சில பயணிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்ற பயணிகளின் தலையீட்டால் பிரச்சினை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், இன்று காலை அந்த ரயில் உத்தரபிதேச மாநிலம் மீரட் ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது திடீரென வெளியில் இருந்து ஆயுதங்களுடன் வாக்குவாதம் நடந்த பெட்டியில் ஏறிய சிலர், அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த மோதலில் பயணி ஒருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டார். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.
முதல்நாள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜஸ்வீந்தரையும், தாக்குதல் நடத்திய நபர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் மீரட் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் பதிவாகியுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மீரட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காலையில் நடந்த இந்த சம்பவத்தால் மீரட் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications