பாபா ராம்தேவ் நிறுவனத்தில் நடந்த மோதலில் ஒருவர் பலி: ராம்தேவின் சகோதரர் கைது
ஹரித்வார்: ஹரித்வாரில் உள்ள யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி புட் மற்றும் ஹெர்பல் பார்க் நிறுவனத்தில் பாதுகாவலர்களுக்கும், ஹரித்வார் டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 4 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ளது யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி புட் மற்றும் ஹெர்பல் பார்க் நிறுவனம். அந்த இடத்தில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியை உள்ளூர் போக்குவரத்து யூனியன் ஆட்களுக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் டிரக் யூனியனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து புட் பார்க்கின் பாதுகாவலர்களுக்கும், டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. மோதலில் தல்ஜீத் என்பவர் கொலை செய்யப்பட்டார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராம்தேவின் சகோதரர் ராம் பரத் மற்றும் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராம் பரத் தான் மோதலை தூண்டிவிட்டதாக போலீஸ் எஸ்.பி. ஸ்வீட்டி அகர்வால் தெரிவித்துள்ளார்.
பதாஞ்சலி நிர்வாகத்தினருக்கும், ஹரித்வார் டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலில் முடிந்தது என்று அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications