கடற்படை தின ஸ்பெஷல்: கலக்கப் போகும் நான்கு பெண் சிங்கங்கள்- சிறப்பு பேட்டி
திருவனந்தபுரம்: இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமிக்கு சென்ற எமது சிறப்பு நிருபர் நாட்டுக்காக பாடுபட காத்திருக்கும் நான்கு பெண் கடற்படை அதிகாரிகளை பேட்டி கண்டுள்ளார்.
அந்த 4 பேரும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று கடற்படையில் சேர்ந்து 6 மாத காலம் பயிற்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அனுராதா
துணை லெப்டினன்டான டெல்லியைச் சேர்ந்த அனுராதா கஸ்ஸா தலைநகரில் இருக்கும் பீதம்புராவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். பி.காம். மற்றும் எம்.பி.ஏ. முடித்த பிறகு கடற்படையில் சேர்ந்துள்ளார். அனுராதா கூறுகையில், விமானப்படையில் இருந்த என் தந்தையை பார்த்து தான் நாட்டுக்கு சேவை செய்யும் ஆசை ஏற்பட்டது. நான் குழந்தையாக இருக்கையில் என் தந்தையின் தொப்பி பிடிக்கும். நானும் ஒருநாள் அதிகாரியாகி என் தொப்பியை அப்பாவிடம் அளிப்பேன் என என் அம்மாவிடம் உறுதி அளித்தேன். இந்த அகாடமியில் அளித்த பயிற்சி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.
6 மாத கால பயிற்சி என்னை மிகவும் ஃபிட்டாக ஆக்கியுள்ளது. நான் தற்போது எந்த சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தை பெற்றுள்ளேன் என்றார் மும்பையில் உள்ள ஐஎன்எஸ் ஹாம்லா பயிற்சி மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அனுராதா. சமூக சேவை செய்வது தான் அனுராதாவின் பொழுதுபோக்காம்.
ஷிப்லா
துணை கமாண்டன்ட் ஷிப்லா மாலிக்கின் தந்தை ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி. கடற்படையில் சேரும் முன்பு ஷிப்லா பி.டெக். ஐ.டி. படித்துள்ளார். ஹரியானாவின் பானிபேட்டை சேர்ந்த ஷிப்லா விசாகப்பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 12ம் வகுப்பை படித்துள்ளார். நான் மூன்றாவது வகுப்பு படிக்கையில் என் தந்தைக்கு தமிழகத்திற்கு மாற்றலானது. அப்போது அவர் என்னை கப்பலில் அழைத்துச் சென்றார். அன்றில் இருந்து கப்பல், கடலின் உருவம் என் மனதில் பதிந்துவிட்டது என்றார். ஷிப்லாவுக்கு குஜராத்தில் உள்ள ஐஎன்எஸ் வல்சுரா பயிற்சி மையத்தில் வேலை கிடைத்துள்ளது.
இப்ஷிகா
டெல்லியைச் சேர்ந்த துணை கமாண்டன்ட் இப்ஷிகா குப்தா பிறந்ததில் இருந்து கடலுடன் வளர்ந்துள்ளார். உத்தர பிரதேசத்தில் உள்ள ஏஎப் ஸ்டேஷன் ஹின்டனில் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் படித்துள்ளார்.
இப்ஷிகா கூறுகையில்,
நான் ராணுவ மருத்துவமனையில் பிறந்தேன். இந்திய விமானப்படையில் எனது தந்தை பணிபுரிகிறார். என் திறமையை கண்டறிய என் சீனியர்கள் தான் உதவி செய்தனர். அகாடமியில் பயிற்சி கடுமையாக இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார். அவர் எம்.எஸ்.சி. இயற்பியல் படித்துவிட்டு கடற்படையில் சேர்ந்துள்ளார்.
தேவயானி
துணை கமாண்டன்ட் தேவயானி சராபுக்கும் ராணுவத்திற்கும் தொடர்பு இல்லை. நாக்பூரைச் சேர்ந்த அவர் சோமல்வாரில் உள்ள அரசு பள்ளியில் படித்துள்ளார். அவரது தந்தை பூமியை பற்றி ஆய்வு செய்பவர். மும்பைக்கு வந்து சென்றபோது தான் தேவயானிக்கு கடற்படை, கடலோர காவல்படை மீது காதல் ஏற்பட்டுள்ளது.
பி.ஆர்க். படித்துள்ள தேவயானி கூறுகையில்,
கடற்படையில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் ஒரே வகையான பயிற்சி அளிக்கிறார்கள். எனக்கு வாழ்க்கையில் சவால்கள் பிடிக்கும் என்றார்.
வைஸ் அட்மிரல் அஜீத் கூறுகையில்,
இங்கு உயர் தரமான பயிற்சி அளிக்கிறோம். இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி பெறும் ஒவ்வொருவரின் திறமைகளும் மெருகேற்றப்படுகிறது. பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த பெண்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.