ஒன்றரை மணி நேரத்திற்குள்ளான பயணமா? அப்படீன்னா இனிமேல் ஏர் இந்தியாவில் நான்-வெஜ் கிடையாது
மும்பை: ஏர் இந்தியா விமானத்தின் எகானமி வகுப்பில் 60 முதல் 90 நிமிட நேர உள்நாட்டு விமான பயணத்தில் இனிமேல் அசைவ உணவு கிடையாது, சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு விமானப் போக்குவரத்துக் கழகங்களில் வெளிநாட்டு விமானப் பயணங்களில் மட்டும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சைவம், அசைவம் என வழங்கப்படுகிறது.

பெரும்பாலான உள்ளூர் விமானப் பயணங்களுளில் உணவு வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''60 முதல் 90 நிமிட உள்ளூர் பயணங்களுக்கு அதுவும் எகானமி வகுப்பிற்கு மட்டும் சைவ உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற குறுகிய பயணத்தின்போது, பயணிகளுக்கு சர்வ் செய்ய அரை மணி நேரம் முதல் 40 நிமிட நேரமே கால அவகாசம் கிடைக்கிறதாம். அதற்குள்ளாக, அசைவ உணவையும் தயாரிக்க ஊழியர்களுக்கு சிரமமாக இருக்கிறதாம்.
அசைவ பழக்கம் உள்ளவர்கள் சைவமும் சாப்பிடுவார்கள் என்றபோதிலும், சைவம் மட்டுமே சாப்பிடுவோர் அசைவத்தை சாப்பிடுவதில்லை. இதை கருத்தில் கொண்டு, சைவம் மட்டும் சமைத்து சப்ளை செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாம். ஜனவரி 1ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
மும்பை-டெல்லி, மும்பை-பெங்களூர், சென்னை-பெங்களூர் போன்ற பிசியான மற்றும் குறுகிய ரூட்டில் பயணிக்கும் அசைவ விருப்ப பயணிகள் இந்த புதிய நடைமுறையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதனிடையே, ஏர் இந்தியாவின் இந்த முடிவு குறித்து தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தனக்கு கஷ்டமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications