நாடாளுமன்ற விவாத்தில் மோடி பங்கேற்கும் வரை அமளி- அதிமுக திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு மோடி வரும் வரை அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 28ம் தேதி நாடு முழுவதும் கண்டன நாள் அனுசரிக்கப்படும் என்று நேற்று முன்தினம் முடிவெடுத்தன. தொடர்ந்து, நேற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி அவைக்கு வராமல் விவாதம் நடத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு அதேபோன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக பதில் தர வேண்டும் என்றும் அதுவரை அமளியில் ஈடுபடுவது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications