அவர்களே சும்மா இருக்கும்போது.. ஸ்டாலினுக்கு என்ன அவசரம்.. காங். கூட்டணி கட்சிகள் அதிருப்தி
Recommended Video

டெல்லி: கூட்டணி கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமர் வேட்பாளர் ராகுல் என ஸ்டாலின் அறிவித்துள்ளது எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியாயினும் தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக திமுகவும் தேசிய கட்சிகளும் கரம் கோர்த்துள்ளன.
இதற்கு முன்னோட்டமாக நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசிய போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன். பாசிச மோடி அரசை வீழ்த்தும் வல்லமை அவருக்கு உண்டு. ராகுலின் கரத்தை நாம் வலுப்படுத்துவோம் என ஸ்டாலின் பேசினார்.

அதிருப்தியில்
கூட்டணி கட்சியினரை கலந்தாலோசிக்காமல் பிரதமர் வேட்பாளர் ராகுல் என ஸ்டாலின் அறிவித்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை அதிருப்தியில் உள்ளன.

வரவேற்கத்தக்கது அல்ல
இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். நாங்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் இதுகுறித்து அதிருப்தியில் உள்ளனர். மற்ற கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும்போது இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது அல்ல. மேலும் திரிணமூல் காங்கிரஸுடன் ராகுலுக்கு சுமூக உறவு இல்லை.

காங்கிரஸே சும்மா இருக்கிறார்கள்
இது கூட்டணி கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும். பொதுவாக பிரதமர் வேட்பாளர் என்பவர் லோக்சபா தேர்தலுக்கு பின்னர்தான் அறிவிக்கப்படுவார். அதிலும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை செய்து விட்டே முடிவு எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியே யார் பெயரையும் குறிப்பிடாத போது மற்ற கட்சிகள் ஏன் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளன.

இத்தனை கட்சிகள் அதிருப்தி
ஸ்டாலினின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட்கள் ஆகியன அதிருப்தியில் உள்ளதாக எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.












Click it and Unblock the Notifications