மோடியை சந்திக்க ஓபிஎஸ் மீண்டும் டெல்லி பயணம்- அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை?
பிரதமர் நரேந்திர மோடியை நாளை டெல்லிக்கு சென்று சந்திக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து இன்று மாலை டெல்லி செல்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இச்சந்திப்பில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது,
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்தார். ஆனால் இச்சந்திப்பு நடைபெறவில்லை.
டெல்லியில் காத்திருப்பு
இதனால் டெல்லியிலேயே ஓ.பன்னீர் செல்வம் காத்திருந்து பார்த்தார். ஆனாலும் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை
ஷீரடி தரிசனம்
இதையடுத்து டெல்லியில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ் ஷீரடிக்கு சென்றார். ஷீரடி சாய்பாபா கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
திடீர் டெல்லி பயணம்
இந்நிலையில் ஷீரடியில் சுவாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் இன்று மாலை மும்பையிலிருந்து டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக இணைப்பு?
இச்சந்திப்பில் தமிழக அரசியல், அதிமுக இணைப்பு குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடியார் பிரதமர் மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.