உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவல்
காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றே நேபாள அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக லூகாஸ் ஃபர்டன்பேக் நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் கொரோனா பரவல் உள்ளது என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பல நாடுகளிலும் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் நல்ல பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரம்
நேபாளத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பெருவாரியாகக் குறைந்துள்ளதால், மலையேற்றத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில், எவரெஸ்ட் மலையேற்றத்திற்குத் தயார் செய்து தரும் ஃபர்டன்பேக் அட்வென்சர்ஸ் நிறுவனம் எவரெஸ்ட் சிகரத்தில் பலருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் லூகாஸ் ஃபர்டன்பேக் கூறுகையில், அங்கு இருக்கும் பாதுகாப்பு பைலெட்டுகள், மருத்துவர்கள் உள்ளிட்ட குறைந்தது 100 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் பரிசோதனை முடிவுகள் எங்களிடம் உள்ளன. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

100 பேருக்கு கொரோனா
சிகரத்தின் அடிவாரத்தில் இருக்கும் கேம்பில் மட்டும் குறைந்தது 100 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கும் என நினைக்கிறேன் ஒட்டுமொத்தமாக 150 முதல் 200 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கலாம். அங்குச் சென்று பார்த்தாலே நிலைமை எப்படி இருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும்" என்று அவர் தெரிவித்தார். இதனால் ஃபர்டன்பேக் அட்வென்சர்ஸ் நிறுவனம் இந்தாண்டு மலையேற்றத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

நேபாள அரசு
இருப்பினும் மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நேபாள அரசுக்கு எவரெஸ்ட்டில் மலையேற்றத்தை மேற்கொள்பவர்கள் மூலம் கணிசமான தொகை வருவாயாகக் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் முற்றிலுமாக மலையேற்றம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

408 பேருக்கு அனுமதி
இந்த ஆண்டு மொத்தம் 408 வெளிநாட்டவருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உதவிக்குப் பல உள்ளூர் ஷெர்பாக்கள் மற்றும் ஊழியர்கள் முகாம்களில் இருப்பார்கள். அவர்களில் தான் 100 பேருக்குத் தான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஃபர்டன்பேக் அட்வென்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது குறித்து நேபாள அரசு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications