ஐஎன்எக்ஸ் விவகாரம்: ப. சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்?
ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது என்பது சிபிஐ வழக்கு. ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் இம்முறைகேடுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் உடந்தையாக இருந்தது என்பதும் குற்றச்சாட்டு.
இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னதாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இம்முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டன் சென்றிருந்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.