பஹல்காம் தாக்குதல்: களமிறங்கிய இந்திய ஆர்மி.. இடிக்கப்பட்ட வீடுகள்.. சிக்கிய தீவிரவாதிகள் நெட்வொர்க்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளை கைது செய்வதற்காக ராணுவம், காவல்துறை நடத்தும் தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை இடித்தும், 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், அனந்த்நகர் மாவட்டம், பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் அங்கு செல்வதற்குள் தீவிரவாதிகள் தப்பிவிட்டனர். தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளின் பெயர், மதம் கேட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதலில் பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக ராணுவம் மற்றும் காவல்துறை தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். ராணுவத்தினர் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "கடந்த 48 மணி நேரத்தில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட 5 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதி செயல்களிலும் ஈடுபடுவோர் அல்லது துணை செல்வோருக்கு இதே நடவடிக்கைகள் தொடரும். முக்கியமாக அனந்த்நகரில் உள்ள மோஸ்ட் வான்டட் தீவிரவாதிகள் ஆதில் தோகீர், அசீப் ஷேக் ஆகியோரின் நெட்வொர்க்கை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறோம்.
இவர்களில் ஆதில் தோகீர் நேரடியாகவே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு துணை செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட களப்பணியாளர்களை சுற்றி வளைத்துள்ளோம். அப்போது பந்திப்போரா பகுதியில் தீவிரவாதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கி சண்டையின்போது 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
அனந்த்நகர் முழுவதும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகளை அதிகரித்து சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம். குல்காம் பகுதியில் 2 தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஶ்ரீநகரிலும் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறோம்." என்றனர்.












Click it and Unblock the Notifications