போர்பந்தர் கடற்படை தளத்தை குறி வைத்து வந்த பாகிஸ்தான் படகு
அகமாதாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் போர்பந்தரில் உள்ள கடற்படை தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை அதிகாரிகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி தகவல் கிடைத்தது.
இதையடுத்து உளவுத் துறை அதிகாரிகள் கடலோர காவற்படை அதிகாரிகளுடன் சேர்ந்து பணியாற்றி வந்தனர். குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள கடற்படை தளத்தில் ஏதோ தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பது மட்டும் தெரிய வந்தது.
வெடிபொருட்கள்
இந்திய கடல் பகுதிக்குள் வந்த பாகிஸ்தான் படகில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது. படகில் இருந்த 4 பேரும் போர்பந்தர் கடற்படை தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவே திட்டமிட்டிருந்தனர்.
சாட்டிலைட் போன்கள்
படகில் இருந்து நால்வரிடமும் சாட்டிலைட்(செயற்கைக்கோள்) போன்கள் இருந்துள்ளது. அவர்கள் கராச்சியில் உள்ள தலைவரை தொடர்பு கொண்டு அவ்வப்போது தகவல் அளித்து வந்துள்ளனர்.
அவர்கள் கராச்சியில் உள்ள ஒருவரிடம் இருந்து உத்தரவை பெற்று செயல்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்தவரா அல்லது முன்னாள் அதிகாரியா என்று விசாரணை நடந்து வருகிறது.
படகு ஆட்கள்
படகில் இருந்த 4 பேரும் இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கவில்லை. மாறாக அவர்கள் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு திரும்ப முயன்றபோது சுற்றி வளைக்கப்பட்டனர்.
அவர்கள் இந்திய கடல்பகுதிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் வரை வந்துள்ளனர். அவர்கள் இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுடவில்லை. மாறாக திரும்பிச் செல்ல முயன்றனர். பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல அல்லது முடியாவிட்டால் படகை வெடிக்கச் செய்ய அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்திருக்கிறது.
தற்கொலைப்படை தாக்குதல்
அவர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவே இந்திய கடல் பகுதிக்குள் வந்துள்ளனர். அவர்கள் போர்பந்தர் கடற்படை தளத்தை அடைந்ததும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
உஷார் நிலை
போர்பந்தர் சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டன. போர்பந்தர் போன்று வேறு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை தெரிவித்தது. பாகிஸ்தான் அத்துமீறி இந்திய ராணுவம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் இது போன்று ஏதாவது பெரிதாக திட்டமிட்டால் தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும்.