எல்லை தாண்டியபோது பாக். ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய வீரர்.. 14 வீரர்களை கொன்றதாக பாக். புருடா
டெல்லி: கட்டுப்பாட்டு எல்லையை மீறி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின்போது, பாகிஸ்தான் ராணுவத்தினரால், 14 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் பொய் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் பொய்யானவை என இந்திய ராணுவமும் உறுதியாக தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும், தீவிரவாத இலக்குகளை குறிவைத்து நடத்தும் தாக்குதலை வெற்றிகரமாக முடித்து சுமார் 40 தீவிரவாதிகளை கொன்று குவித்து ஆபத்தின்றி திரும்பியது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஊடக செய்திகளில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 14 வீரர்கள் இத்தாக்குதலின்போது உயிரிழந்ததாகவும், ஒருவரை உயிருடன் பிடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதாகும், சந்து பாபுலால் சவுகான் என்ற ராணுவ வீரர் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிடிபட்டது உண்மை
இந்திய ராணுவமோ தங்கள் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கூறியுள்ளது. அதேநேரம், சந்து பாபுலால் தவறுதலாக எல்லையை தாண்டியதாகவும் அப்போது பிடிபட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது. சந்து பாபுலாலை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பாக். மீடியாக்கள் விஷமம்
ஜியோ டிவி, தி நேஷன் போன்ற பாகிஸ்தான் ஊடகங்கள்தான் இந்திய ராணுவத்தினர் 14 பேர் கொல்லப்பட்டதாக பொய் தகவல்களை பரப்பி வருகின்றன. ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்தியா புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம், தங்களுக்கு தலை குனிவு என நினைக்கும், பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற பொய் தகவல்களை மீடியாக்கள் வாயிலாக பரப்பி வருவதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ராகத்தை மாற்றும் பாகிஸ்தான்
ஏனெனில், எல்லை கடந்து இந்தியா தாக்குதல் நடத்திய தகவலை முதலில் மறுத்து வந்தது ராணுவம். எல்லையில் நின்றபடி சகட்டு மேனிக்கு பாகிஸ்தான் படைகளை இந்திய வீரர்கள் சுட்டதாகத்தான் கூறிவந்தது. அப்போது இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக ராணுவம் கூறவில்லை. ஆபத்து குறைவான தோட்டாக்களை கொண்டே சுட்டுக்கொண்டதாக கூறிவந்தது. ஆனால் திடீரென 14 பேர் கொல்லப்பட்டதாக மாற்றி பேச ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான்.

ஆதாரம் இல்லை
ஒரு பகுதியில் 8 ராணுவ வீரர்களும், சற்று தொலைவில் மற்றொரு பகுதியில் 6 ராணுவ வீரர்களும் என மொத்தம், 14 இந்திய ராணுவ வீரர்கள் இத்தாக்குதலில் உயிரிழந்ததாக பாக். மீடியாக்கள் கூறுகின்றன. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ வீரர்களின் சடலங்கள் கிடப்பதாகவும் அவை செய்து வெளியிட்டுள்ளன. ஆனால் அதற்கான போட்டோ ஆதாரங்கள் எதையும் அவை வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications