"ரூ.600 கோடி" போதை பொருள்.. பாக்-இல் இருந்து வந்த படகு.. குஜராத் அருகே தட்டி தூக்கிய கடலோர காவல் படை
காந்திநகர்: சுமார் ரூ. 600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகை இந்தியக் கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுபோலத் தான் இப்போது பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை இந்தியக் கடல் பகுதி வழியாகக் கடத்த முயன்ற படகை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
போதைப்பொருள்: இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடலோரக் காவல்படைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் என்சிபி அமைப்புடன் இணைந்து கடலோர காவல் படை இந்த அதிரடி ஆப்ரேஷனை நடத்தியுள்ளனர்.
இந்த 3 அமைப்புகளும் இணைந்து நடத்திய ஆப்ரேஷனில் அப்பகுதியில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது தான் படகில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் சேர்ந்த 14 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.
₹ 600: இது குறித்து கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நள்ளிரவில் இந்த ஆப்ரேஷனை நடத்தினோம். இந்திய கடலோர காவல்படை தனக்குக் கிடைத்த சீக்ரெட் தகவலை வைத்து நடுக்கடலில் இந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆப்ரேஷனை நடத்தினோம். பாகிஸ்தான் படகில் இருந்து 14 பணியாளர்களுடன் ₹ 600 கோடி மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: உளவுத் தகவல் கிடைத்தவுடன் அந்தப் படகைச் சுற்றி வளைக்க இந்தியக் கடலோர படை முடிவு செய்துவிட்டது. இதற்காக பாகிஸ்தானிலிருந்து அந்தப் பகுதியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். படகைத் தவற விடக்கூடாது என்பதற்காக நமது பாதுகாப்புப் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களை என இரண்டையும் கடலோர காவல் படை களத்தில் இறக்கியுள்ளன. குறிப்பாகக் கடலோர காவல்படையின் ராஜ்ரதன் கப்பல் தான் அந்த பாக். படகை முதலில் நெருங்கி உள்ளது..
இந்திய பாதுகாப்புப் படையை தங்களை நெருங்குவதை உணர்ந்த அந்த பாகிஸ்தான் படகு தப்பிக்கப் பல முயற்சிகளை எடுத்துள்ளன. இருப்பினும், அனைத்தையும் தாண்டி அந்த பாக். படகைத் தட்டி தூக்கியுள்ளனர் இந்தியக் கடலோர காவல் படை.. என்சிபி மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என இரு தரப்பும் அந்த இந்திய பாதுகாப்புப் படையின் கப்பலில் இருந்துள்ளனர். அந்த ஸ்பெஷல் டீம் நடத்திய சோதனையில் பாக். படகில் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடலோர காவல் படை அதிகாரி: இது குறித்து கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "போதைப்பொருளுடன் வந்த அந்த படகு தப்பிக்க பல்வேறு தந்திரங்களைக் கையாண்டது. இருப்பினும், நமது ராஜ்ரதன் கப்பலிடம் இருந்து அவர்களால் தப்ப முடியவில்லை. அவர்களைச் சுற்றி வளைத்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது" என்றார்.
கைப்பற்றப்பட்ட அந்த படகும் அதில் இருந்த பணியாளர்களும் இப்போது குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது..












Click it and Unblock the Notifications