குழந்தைக்கு விசா கிடைக்காமல் தவித்த பெண் – பாகிஸ்தான் திரும்பினார்
ஜெய்ப்பூர்: இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு விசா இன்றி தவித்த மாய் பாத்திமா என்ற பெண் பாகிஸ்தான் திரும்பி சென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் வாழ்ந்த தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் மாய் பாத்திமா என்ற பெண் தனது தாயை சந்தித்து ஆறுதல் கூற கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கணவருடன் ராஜஸ்தானுக்கு வந்தார்.
இந்தியாவில் பிரசவம்:
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 14 ஆம் தேதி ஜெய்சால்மர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற போது அவர்களின் பாஸ்போர்ட்டில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாததால், இந்திய எல்லையை விட்டு அனுப்ப குடியுரிமை துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
விசாவுக்கு கோரிக்கை:
இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பிறந்ததற்கான அரசு சான்றிதழை பெற்ற மாய் பாத்திமாவின் கணவர் மீர் முகம்மது தங்கள் மகனுக்கு விசா கேட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தை நாடினார்.
ஏக்கத்தில் பாத்திமா:
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கையில் 15 நாள் பச்சிளம் குழந்தையுடன், எப்போது விசா கிடைக்கும் என்ற ஏக்கத்தில் மாய் பாத்திமா கடந்த ஒரு வாரமாக கவலையுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் திரும்பினர்:
இந்நிலையில், பிறந்த குழந்தையுடன் அந்த தம்பதியர் இந்தியாவை விட்டு செல்ல பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி அளித்ததால் நேற்று அவர்கள் ஜோத்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றதாக மாய் பாத்திமாவின் தாத்தா ரசூல் கான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications