நெடுஞ்சாலையில் சிசிடிவி.. பாகிஸ்தானுக்கு பறந்த சிக்னல்.. ராணுவத்தை காட்டி கொடுத்த துரோகி அதிரடி கைது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியான பத்தான்கோட்டில் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து, அந்தத் தகவல்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தி வந்த ஒரு உளவு நெட்வொர்க்கை பஞ்சாப் போலீசார் அதிரடியாக முறியடித்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் ரகசியமாகக் கேமராக்களைப் பொருத்தி ராணுவ நடமாட்டத்தை பாகிஸ்தானுக்கு லைவ்வாக அனுப்பி வந்த ஒரு நபர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்!
பொதுவாக நமது நாட்டின் ராணுவத்தில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யும் மாநிலங்கள் என்றால் அது பஞ்சாப்பும் ஹரியானாவும் தான். ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவத்திற்கு இந்த இரு மாநிலங்களில் இருந்து மட்டும் அதிகபட்ச நபர்கள் இணைகிறார்கள். பலர் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யக் கூட தயங்குவதில்லை. ஆனால், அதே பஞ்சாப்பில் சிலர் பாகிஸ்தானுக்காக உளவு பார்க்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை!

நெடுஞ்சாலை கேமரா
அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. பத்தான்கோட் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் இருக்கும் கடையில், சந்தேகத்திற்குரிய வகையில் சிசிடிவி கேமரா மூலம் ராணுவ நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுஜான்பூர் போலீசார் நடத்திய மின்னல் வேகச் சோதனையில், சக் தரிவால் கிராமத்தைச் சேர்ந்த பல்ஜித் சிங் என்ற பிட்டு என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பல்ஜித் சிங்கிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல அதிரடி உண்மைகள் வெளிவந்துள்ளன.
அதாவது ராணுவக் கான்வாய்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, கடந்த ஜனவரி மாதம் சுஜான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராவை பிட்டு பொருத்தியுள்ளார். துபாயில் உள்ள அடையாளம் தெரியாத ஒரு நபர் சொன்னதைக் கேட்டே இதுபோல கேமராவை பொருத்தியுள்ளார். இதற்காக பிட்டுவுக்கு ₹40,000 பணமும் கைமாறியுள்ளது. இதையடுத்து ஒரு சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை ரூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது
இந்த விவகாரத்தில் பல்ஜித் சிங் தவிர, விக்ரம்ஜித் சிங், பால்விந்தர் சிங், மற்றும் தரன்பிரீத் சிங் ஆகிய மேலும் மூன்று பேர் மீதும் தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாகப் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே வேறு வழக்கில் சிறையில் உள்ள நிலையில், எஞ்சியவர்களைப் பிடிக்கத் தனிப்படை சோதனைகள் தீவிரச் சோதனையில் இறங்கியுள்ளனர்.
சோலார் கேமரா
பத்தான்கோட் சம்பவம் ஒருபுறமிருக்க, கடந்த மாதம் பஞ்சாபில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பின்னணியுடன் இயங்கி வந்த இரண்டு மிகப் பெரிய ஹைடெக் உளவு முயற்சிகளை போலீசார் முறியடித்தனர். அதாவது ஜலந்தர் மற்றும் கபுர்தலா ஆகிய இடங்களில் இந்த நெட்வொர்க்குகள் முறியடிக்கப்பட்டன. இவர்கள் ராணுவக் குடியிருப்புகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படைத் தளங்களுக்கு அருகில், சீன தயாரிப்பு சோலார் 4G சிம் கேமராக்களைப் கம்பங்களில் பொருத்தி உளவு பார்த்துள்ளனர்.
இந்தச் சீன கேமராக்கள் சோலார் மற்றும் 4G மூலம் இயங்குவதால், அவற்றுக்குத் தனியாக மின்சார வயரிங் எதுவும் தேவையில்லை. இதனால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் மூலம் ராணுவ அசைவுகள் அனைத்தையும் மொபைல் ஆப் வழியாகப் பாகிஸ்தானில் உள்ள ஏஜெண்டுகளுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர். கபுர்தலாவில் பிடிபட்ட இவர்களுக்குப் பின்னணியில் பௌஜி என்ற பாகிஸ்தான் ஏஜெண்டு இருந்துள்ளார்.
அதிரடி கைது
கேமரா பொருத்த ₹35,000 கொடுத்த பௌஜி, ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி ஹெராயின் விநியோகத்தில் ஈடுபடுவதும் அதற்கும் தனியாக பணம் கொடுப்பதும் விசாரணையில் அம்பலமானது. இந்த வழக்குகளில் பெரோஸ்பூரைச் சேர்ந்த சுக்விந்தர் சிங், சோனா மற்றும் சந்தீப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதனுக்கு எவ்வளவு நன்மையோ, அவ்வளவு ஆபத்து என்பதற்கு இந்தச் சம்பவமும் மற்றொரு உதாரணம். எல்லையில் நமது ராணுவத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், கோழைத்தனமாக சோலார் 4G கேமராக்கள் மற்றும் துரோகிகளை வைத்து இந்தியாவை கண்காணிக்க முயல்கிறது. ஆனால், அதையும் நாம் வெற்றிகரமாகக் காலி செய்தே வருகிறோம்.












Click it and Unblock the Notifications