"திருந்தாத பாகிஸ்தான்".. பிரதமர் மோடி கொடுத்த ‛வார்னிங் மெசேஜ்’..கார்கில் விஜய் திவாஸில் ‛அட்டாக்’
ஜம்மு காஷ்மீர்: "கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள்" என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி எச்சரிக்கை செய்தார்.
கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி நம் நாடு வெற்றி பெற்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ம் தேதியை கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொண்டாட்டத்தின்போது ஒருபகுதியாக போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு அஞ்சலியுடன் மரியாதை செலுத்தப்படும். அந்த வகையி்ல பிரமதர் மோடி இன்று கார்கில் விஜய் திவாஸையொட்டி உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "இன்று லடாக்கின் இந்த மாபெரும் நிலம், கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு விழாவைக் காண்கிறது. தேசத்துக்காக செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் வெற்றி நமக்குச் சொல்கிறது.
நாட்டிற்காக உயிர்தியாகம் செய்ததற்காக ராணுவ வீரர்களுக்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டு உள்ளது. 1999 ல் கார்கிலில் ராணுவ வீரர்களை சந்தித்த அனுபவம் உள்ளது. கார்கில் போரில் உயிர்தியாகம் செய்தவர்களுக்கு தலைவணங்குகிறேன். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.
பாகிஸ்தானால் ஒருபோதும் இந்தியாவை வீழ்த்த முடியாது. அனைத்து வகையான பயங்கரவாத சவால்களும் முறியடிக்கப்படும்.
பயங்கரவாதிகளின் சதி நிறைவேற அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதத்தை தூண்டிவிடுபவர்களின் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்.பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. எதிரிகளுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.
370 நீக்கிய பிறகு காஷ்மீர் வளர்ச்சியை கண்டுள்ளது.காஷ்மீரில் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகிறது. புது எதிர்காலத்தை பற்றி காஷ்மீர் சிந்தித்து வருகிறது. பல தசாப்தங்களுக்கு பிறகு சினிமா ஹால் திறக்கப்பட்டது. லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு உள்ளது. இளைஞர்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறது. பென்சன் தொகையை சேமிப்பதற்காக அக்னிவீர் திட்டம் செயல்படுத்தவில்லை. பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அக்னிவீரர்கள் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன'' என்றார்.












Click it and Unblock the Notifications