மோடியின் தாயாருக்கு புடவை அனுப்பிய நவாஸ் ஷெரிப்
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சேலை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மோடியும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமராக நரேந்திரமோடி கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அந்த விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்தார். நவாஸ் ஷெரிப்பும் விழாவுக்கு வந்து கவுரவித்தார். அப்போது, நவாஸ் ஷெரிப்பின் தாய்க்கு, மோடி ஒரு சால்வையை பரிசாக கொடுத்தனுப்பினார். இதற்காக ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவாஸ் ஷெரிப், மோடியின் தாய்க்கு சேலையொன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி இன்று செய்துள்ள ட்விட்டில், "நவாஸ் ஷெரிப் ஜி, அருமையான ஒரு வெண்ணிற சேலையை எனது தாய்க்காக அனுப்பி வைத்துள்ளார். இதற்காக நெகிழ்ச்சியடைகிறேன். எனது தாயாருக்கு இந்த சேலையை விரைவில் அனுப்பி வைப்பேன்" என்று கூறியுள்ளார்.