உளவு விவகாரம்.. இந்தியாவை விட்டு 6 பாக். தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த 6 அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய மெகமூத் அக்தர் என்பவர் ராணுவ ரகசியங்களை களவாடி பாகிஸ்தானுக்கு அனுப்ப முயன்றதை மத்திய உளவுத்துறை கையும் களவுமாக கண்டுபிடித்தது.

இந்திய ராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் மேப்கள், இந்திய படைகளின் நகர்வு, ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மெகமூத் அக்தர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வரும் 6 அதிகாரிகள், இந்தியாவை விட்டு வெளியேறினர். பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் வர்த்தக ஆலோசகர் சையத் பரூக் ஹபீப், முதல் நிலை செயலாளர்கள் காதிம் உசேன், முடாசிர் சீமா மற்றும் சாகித் இக்பால் ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் இரண்டு அதிகாரிகளும் பாகிஸ்தான் தூதரகத்தை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் பலரை தூதரகத்தில் இருந்து, பாகிஸ்தான் திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications