பதன்கோட் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் மசூத் அசாரை கைது செய்யவே இல்லை: உளவுத் துறை
டெல்லி: பதன்கோட் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த ஜெய்ஷ் இ முகமுது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் இன்னும் பாகிஸ்தானால் கைது செய்யப்படவில்லை என்று இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பதன்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் தான் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அசாரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசோ அசார் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில் அசார் கைது செய்யப்படவே இல்லை என்றும், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஏதோ சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வைத்திருந்த காரணத்திற்காக அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் கைதுக்கும் பதன்கோட் தாக்குதல் வழக்கிற்கும் தொடர்பு இல்லை.
அசார் கைது செய்யப்பட்டதாக முன்பு கிடைத்த தகவல் பாகிஸ்தான் உளவு ஏஜென்சிக்களால் பொய்யாக பரப்பிவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கிய தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண்கள் குறித்த விபரங்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த செல்போன் எண்களின் உரிமையாளர்கள் யார் என்பதை பாகிஸ்தான் இதுவரை தெரிவிக்கவில்லை என்கிறது உளவுத் துறை.












Click it and Unblock the Notifications