”எங்களுக்கு 1 லட்சம் சம்பளம் வேணும்” - கோஷம் போடும் எம்.பிக்கள்.. கிடப்பில் போடப்பட்ட கோரிக்கை
டெல்லி: எம்.பி.க்களின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் தொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான எம்.பி.க்கள் குழு அளித்த ஆலோசனைகள் மத்திய அரசால் இப்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான இந்தக்குழு சம்பள உயர்வு தொடர்பாக எம்.பி.க்களிடம் கருத்து கேட்டபோது, சம்பள உயர்வுடன் அலவன்ஸ் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை பரிசீலித்த நாடாளுமன்றக் குழு, எம்.பி.க்களின் சம்பளத்தை இரட்டிப்பாக உயர்த்துவது உள்பட 60 சிபாரிசுகள் செய்தது.

இந்த சிபாரிசுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்த பின்பு மத்திய அரசின் ஒப்புதலுடன் விரைவில் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போதைக்கு இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான எம்.பி.க்கள் குழு அளித்த ஆலோசனைகளை ஊடகங்கள் பூதாகரமாக காட்டியதால் ஏற்பட்ட பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து இந்த தற்காலிக முடிவு எடுக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் தற்போது ரூபாய் 50 ஆயிரமாக உள்ள எம்.பி.க்கள் சம்பளம் ரூபாய்1 லட்சமாக உயரும்.
இதே போல் தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது எம்.பி.க்களுக்கு அளிக்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் சலுகையும் உயர்த்தப்படும்.
இது தவிர, முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 20 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூபாய் 35 ஆயிரமாக உயர்த்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்களின் சம்பளம், தொகுதிப்படி, அலுவலக படி ஆகியவற்றை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், மரச்சாமான்கள் படியை ரூபாய் 75 ஆயிரத்தில் இருந்து இருமடங்காக உயர்த்த வேண்டும் என்றும், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை 75 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும், எம்.பி.க்களின் வாழ்க்கை துணைக்கு அளிக்கப்படும் சலுகைகளை அவர்களுடைய தோழர் அல்லது தோழிக்கும் வழங்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்களுக்கு மனைவியுடன் முதல் வகுப்பு ஏ.சி பெட்டிகளில் இலவச பயணம், உடன் வருபவருக்கு 2ம் வகுப்பு பெட்டியில் இருக்கை ஒதுக்கீடு, விமான பயணச்சலுகை அலவன்ஸ், இலவச வீடு ஒதுக்கீடு, 50,000 யூனிட் இலவச மின்சாரம், ரூபாய் 4,000 லிட்டர் தண்ணீர், டெலிபோனில் 50,000 இலவச அழைப்புகள் உள்ளிட்டவை தற்போது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாமை செஞ்சானாம் ஒருத்தன் அதை வெட்டித் தின்னானாம் இன்னொருத்தன்!! என்னவோ போங்கப்பா!












Click it and Unblock the Notifications