காஷ்மீர் முதல்வரின் பாக். ஆதரவு பேச்சு: லோக்சபாவில் இன்றும் புயலை கிளப்பிய எதிர்கட்சிகள்
டெல்லி: காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீதின் பாகிஸ்தான் ஆதரவு பேச்சு, லோக்சபாவில் இருதினங்களாக புயலை கிளப்பி வருகிறது. இன்றும் இப்பிரச்னையை கையில் எடுத்த லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பிரதமர் மோடி அவைக்கு வந்து இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக பொறுப்பேற்ற முப்தி முகம்மது சயீது, 'காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்க, பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்,' என்றார். இது குறித்து எதிர்கட்சிகள் லோக்சபாவில் பிரச்னையை கிளப்பின. சயீதின் சர்ச்சை பேச்சை கண்டித்து, லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று கோரி வெளிநடப்பிலும் ஈடுபட்டன.

வெங்கையா - ராஜ்நாத்
இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையநாயுடு கூறுகையில், ‘வெளிநடப்பு செய்வது எதிர்கட்சிகளின் உரிமை. ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் முப்தி முகம்மது சயீதின் கருத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது,' என்றார்.
சயீதின் பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது என உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங்கும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக பிரதமர் நரேந்திரமோடியுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். அவரது அனுமதிக்கு பின்னர் அவையில் அதற்கான பதிலை அளிக்கிறேன்,' என்றார்.
அப்சல்குருவால் அமளி
இதைத் தொடர்ந்து, அப்சல் குரு குறித்து பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பேசிய பிரச்னை லோக்சபாவில் வெடித்தது. நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பி.டி.பி., எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால், தொடர்ந்து அமளி நிலைவியதால், லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
காஷ்மீர் முதல்வரின் சர்ச்சை
ஜம்மு-காஷ்மீர் முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற பி.டி.பி., கட்சித் தலைவர் முப்தி முகமது சயீது செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பயங்கரவாத அமைப்புகளும் அளித்த ஒத்துழைப்பே காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
இந்நிலையில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டது நீதியின் தவறாகும். அவரைத் தூக்கிலிட்டதில் அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications