26ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்- 3 அவசர சட்ட மசோதாக்கள் நிறைவேறுமா?
டெல்லி: டெல்லியில் வருகின்ற 26 ஆம் தேதியன்று துவங்குகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 3 அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறிப்பிடத்தக்க வகையில் அலுவல் எதுவும் நடக்காமல் வீணடிக்கப்பட்டது.

அத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை முறைப்படி சட்டமாக்குவதற்கான மசோதாவினை நிறைவேற்ற முடியாமல் போனது.
3 முக்கிய மசோதாக்கள்:
இதனால் அந்த அவசர சட்டம் காலாவதியானது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 26 இல் துவங்குகிறது. இத்தொடரில் வேறு மூன்று முக்கிய அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரம் காட்டும் எனத் தெரிகிறது.
கூட்டத்தொடரில் முக்கியத்துவம்:
வங்கி காசோலைகள் பணமின்றி திரும்பி வருவது தொடர்பான "நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட்" சட்ட மசோதா, ஐகோர்ட்டுகளின் வர்த்தக மேல்முறையீட்டு மன்றங்கள் பிரிப்பு தொடர்பான மசோதா முறையீடு மற்றும் சமரச அவசர சட்ட மசோதா ஆகியவற்றுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
எதிர்ப்பு இருக்குமா?:
குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்புத் திட்டம் வகுத்துள்ளனர்.
நீண்ட காலமாக நிறைவேறாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன.
அனைத்துக் கட்சிக் கூட்டம்:
எனவே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் கூட்டத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நாளை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து முக்கிய மசோதாக்கள் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நோக்கில் 26 இல் அனைத்துக் கட்சி கூட்டத்தையும் அவர் கூட்டவுள்ளார்.












Click it and Unblock the Notifications