மியான்மர் தாக்குதலை பார்த்த பாக். பயத்தில் உளற ஆரம்பித்துவிட்டது: பாரிக்கர் கிண்டல்
டெல்லி: இந்தியா நடத்திய மியான்மர் தாக்குதலை பார்த்து பாகிஸ்தான் பயத்தில் உளறத் தொடங்கிவிட்டது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
மணிப்பூரில் இந்தியா ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். அந்த தீவிரவாதிகள் மியான்மர் எல்லையில் பதுங்கி இருப்பதை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியதில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அளித்த பேட்டியில் "இந்திய ராணுவத்தினரின் பதிலடி, மற்ற நாடுகளுக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கை" என தெரிவித்தார்.
இதனிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான், இன்று கூறுகையில் "மியான்மரில் நடத்தியதை போல பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தலாம் என இந்தியா கனவு காணக் கூடாது. இது பாகிஸ்தான். மியான்மர் அல்ல. எல்லை தாண்டி எந்தப் படை வந்தாலும் பாகிஸ்தான் படைகள் தக்க பதிலடி கொடுக்கும். எனவே இதுதொடர்பாக இந்தியாவும், இந்தியர்களும் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவம் எத்தகைய சூழல்நிலைக்கும் தயாராகவே உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்காது" என்று கூறியுள்ளார்.
இதனிடையே இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நிருபர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு, இந்தியா மீது பயம் வந்துவிட்டது. எனவேதான், மியான்மர் விவகாரத்தில் தானாக வந்து கருத்து கூறிக்கொண்டுள்ளது. மியான்மர் தாக்குதலை பார்த்த பிறகு இந்தியா பற்றிய உலக நாடுகளின் கண்ணோட்டம் மாறியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications