ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 35 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மீட்பு பணி நடந்து வருகிறது.
மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கால்வாய்க்குள் பஸ் பாய்ந்தது
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் இருந்து சத்னா என்ற இடத்துக்கு 54 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷார்தா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.

மீட்பு பணி தீவிரம்
காலை 8.30 மணி அளவில் இந்த கோர விபத்து நடந்தது. கால்வாயில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பி இருந்ததால் அந்த பஸ் முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது. பஸ்ஸில் இருந்த 54 பயணிகளும் நீருக்குள் மூழ்கினர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து சென்றனர். மாநில பேரிடர் மீட்பு படையினரும், நீச்சல் வீரர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

35 உடல்கள் மீட்பு
பஸ் கால்வாயின் தரைப்பகுதி வரை மூழ்கியதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. தொடர் மீட்பு பணியில் பஸ்ஸில் இருந்து 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது. மீட்பு பணிக்காக அந்த கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் நிவாரண நிதி
அங்கு தொடர்ந்து மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அமித் ஷா விழா ரத்து
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11 மணியவில் மத்திய பிரதேசத்தில் இரு விழாவில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் இந்த விபத்து ஏற்பட்டவுடன் அமித் ஷா கலந்து கொள்ள இருந்த விழா ரத்து செய்யப்பட்ட்டது. பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications