வௌ்ளத்தில் மிதக்கும் ஆந்திரா.. நேரில் சென்று பார்வையிடாத பவன் கல்யாண்! காரணம் இதுதான் என விளக்கம்
அமராவதி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு அவர் கொடுத்த விளக்கம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மழை காரணமாக மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கனமழையால் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். இது வரை வெள்ளத்தால் சுமார் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீட்பு பணிகளை முன்னின்று நடத்தி வருகிறார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சந்திரபாபு நாயுடு நேரடியாக சென்று, மீட்பு பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு பவன் கல்யாண் நேரடியாக செல்லவில்லை. இது குறித்து குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அவர் விளக்கமளித்திருக்கிறார்.
“நிவாரண பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வெள்ள பாதிப்புகளை பார்வையிடவில்லை. பாதிப்புகளை பார்க்க வேண்டும் என விரும்பினாலும் எனது வருகை சுமையாகி விடக்கூடாது. பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளை விட பொது சேவை செய்வதே முக்கியம்” என்று கூறியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 400க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 3 நாட்களாக விஜயவாடாவில் லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மழை நீடிக்கும் என்பதால் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படுவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications