மோடி இப்டிப் பண்ணிட்டாரே... நம்ம தொழில் இன்னாகுமோ... சங்கடத்தில் "சேட்டு"கள்!
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சென்னையில் உள்ள பான் புரோக்கர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனராம்.
சென்னை: மக்களின் பணச் சிக்கலுக்கு தீர்வு கூற 24*7 தயாராக இருப்பவர்கள் சேட்டுகள்தான்...அதாவது (அடகு) வட்டிக் கடைக்காரர்கள். ஆனால் இப்போது அவர்களுக்கே பணச் சிக்கல் வந்துள்ளதாம். ரூபாய் நோட்டு ஒழிப்பால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனராம் சென்னை நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள சேட்டுகள்.
சேட்டுகள் மட்டுமல்லாது, பெரிய மற்றும் சிறிய நிதி நிறுவனங்களும் கூட இந்த சிக்கலுக்குத் தப்பவில்லையாம். அனைவருமே கடந்த ஒரு வாரமாக பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்களாம்.
இவர்களின் சிக்கலுக்குக் காரணம் கை நிறைய வைத்துள்ள கட்டுக்கட்டான பணத்தை எப்படி மாற்றுவது என்பதுதானாம். அதை விட முக்கியமாக தங்களது தொழிலின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்கள் புலம்புகிறார்கள்.
பணம் இருந்து என்ன புண்ணியம்
பணத்தின் மதிப்பை ஒவர்நைட்டில் காலியாக்கி விட்டார் மோடி. கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த அத்தனை பேரும் இன்று பொலிவிழந்து போய் விட்டார்கள். பலர் போண்டியாகி விட்டதாகவும் கேள்வி.
எல்லோர் தலையிலும் துண்டு!
பலரும் தலையில் துண்டைப் போடும் நிலைக்கு வந்து விட்டனர். குறிப்பாக பான் புரோக்கர்கள் எனப்படும் அடகுக்கடைக்காரர்கள். கட்டுக்கட்டாக பணம் வைத்துக் கொண்டு அடகுப் பொருளுக்குப் பணம் கொடுத்து குண்டக்க மண்டக்க வட்டி வசூலிக்கும் சேட்டுகள்தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனராம்.
வசூல் இல்லை.. திருப்பமுடியவில்லை
வாடிக்கையாளர்களிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க முடியாமல் தவிக்கிறார்களாம். அடகுப் பொருட்களைத் திருப்பவும் முடியவில்லையாம். அதை விட முக்கியமாக தங்களிடம் உள்ள பணத்தை மாற்றவும் முடியாமல் தத்தளிக்கிறார்களாம்.
பெரும் குழப்பத்தில் செளகார்பேட்டை
சென்னையில் செளகார்பேட்டை, வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் உள்ள அடகுக் கடைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அத்தனை சேட்டுகளும் மத்திய அரசு மீது கடும் காட்டத்தில் உள்ளனர்.
பொறுமையா இறுங்கோ
அவர்கள் கூறுகையில் அடகு வைத்த பொருட்களை எங்களிடம் வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். எங்களால் அதைத் திருப்பித் தர முடியாத நிலை. நாங்கள் லாக்கரில்தான் பொருட்களை வைத்திருப்போம். குறிப்பாக நகைகளை. ஆனால் லாக்கர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது. எங்களால் பணத்தையும் மாற்ற முடியவில்லை.
சுத்தமாக முடங்கி விட்டது
எங்களது தொழில் சுத்தமாக முடங்கிக் கிடக்கிறது. வாகனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள்தான் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். பணத்தை திரும்பப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடன் வாங்கியவர்களை நெருக்கவும் முடியவில்லை என்று கூறுகிறார்கள் அடகுக் கடைக்காரர்கள்.
செக் ரிட்டர்ன்
ஆட்டோக்கள், டூவீலர்கள் உள்ளிட்டவற்றை விற்ற பைனான்ஷியர்களும் தவணைப் பணத்தைத் திரும்ப வசூலிக்க முடியாமல் உள்ளனராம். யாரிடமும் கையில் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.