வங்கிகள் மீது கூட பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது மோடி அரசால்தான்.. மன்மோகன்சிங் தாக்கு
பாஜக அரசின் நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு : மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகள் மீதான நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற வேண்டி காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பெங்களூருவில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிகள் மக்களை பெரிதும் பாதித்துள்ளன.
மோடியின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் வங்கிகளின் மீதான நம்பிக்கையை இழந்து இருக்கிறார்கள். சமீபத்தில் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு இதன் காரணமாகவே ஏற்பட்டது.
அதே போல, நீரவ் மோடி விவகாரத்தில் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்தை விட, எதிர்க்கட்சிகளை குறை கூறவே மோடி அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications